திருநெல்வேலி மாணவர் மீது தாக்குதல் – திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவது ஒன்றுதான் தென்தமிழகத்தை சீரழிக்கும் வன்முறை கலாச்சாரத்தில் இருந்து மீட்டெடுக்கும் தீர்வாகும்.!

அறிக்கைகள்
s2 43 Views
  • 6
  • 6
Published: 16 Apr 2025

Loading

திருநெல்வேலி மாணவர் மீது தாக்குதல் – திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவது ஒன்றுதான் தென்தமிழகத்தை சீரழிக்கும் வன்முறை கலாச்சாரத்தில் இருந்து மீட்டெடுக்கும் தீர்வாகும்.!

தென் மாவட்டங்களில் தொடரும் சாதி, மத ரீதியான வன்முறைகளை தடுத்து நிறுத்த சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இவ் வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை ( NIA ) விடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மனு அளித்தோம். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் தென்மாவட்ட படுகொலைகளை தடுப்பதற்கும் மாணவர்களிடையே ஏற்படும் சாதி,மத மோதல்களை தடுப்பதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் இதுவரையிலும் எடுக்காமல் ஒவ்வொரு நிகழ்வின் போதும் மாவட்ட அமைச்சரையோ, உயர் அதிகாரிகளையோ அனுப்பி சமாளிப்பது என்பதை மட்டும் வாடிக்கையாகக் கொண்டுள்ளர்.

நாங்குநேரி பள்ளி மாணவன் சின்னத்துரை மீது நடந்த கொலைவெறி தாக்குதலைத் தொடர்ந்து பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுக்க உரிய ஆலோசனைகளை வழங்க ‘ நீதிபதி சந்துரு ‘ கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் ஆலோசனைகளை நடைமுறைப் படுத்துவோம் என்று அறிவித்த அரசு சாதிப் பெயர்களில் இயங்கும் பள்ளிகளை அரசுப் பள்ளிகளாக மாற்றி அறிவித்தது.

ஆனால், ஒரு பகுதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினர் ஒருநாள் நடத்திய கடையடைப்பிற்கு பயந்து கொண்டு ஒட்டுமொத்த சீர்திருத்த நடவடிக்கைகளையும் கை விட்டுவிட்டு ‘ பின்னங்கால் பிடரியில் படும் அளவிற்கு பின்னோக்கி ஓடி விட்டது ‘. ஆனால், மேடையிலும் சட்டமன்றத்திலும் சமத்துவக் காவலர்கள் போல பிதற்றுவதில் எந்த குறையும் வைப்பதில்லை. ஆட்சியாளர்களின் இவ்வித போக்கின் விளைவாக தென் மாவட்டங்களில் பொது வெளிகளிலும், பள்ளிகளிலும் சாதி, மத ரீதியான மோதல்கள் தொடர்கதை ஆகின்றன.

இன்று நெல்லையில் பட்டப்பகலில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ரஹமதுல்லா எனும் மாணவனை அதே வகுப்பில் பயிலும் மாணவன் தன் புத்தகப்பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்து ஆபத்தான சூழலில் சிகிச்சை பெற்று வருகிறான். தடுக்கச் சென்ற ஆசிரியரும், சில மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.

இதுவெல்லாம் எப்போதாவது, எங்காவது கண்ணிமைக்கும் நொடியில் நடந்து விடுகிறது என்பது வேறு.
ஆனால், நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றன. வன்முறை எண்ணமும் அதை நிறைவேற்றும் அரிவாள் கலாச்சாரமும் பள்ளிகளில் இருந்தே வளருகிறது. இதைத் தடுக்க நாம் கொடுத்த ஆலோசனைகளைக் கூட கிஞ்சிற்றும் நடைமுறைப்படுத்த இந்த அரசுக்கு அக்கறை இல்லை. ஓட்டுக்காக எதையும் விட்டுக்கொடுக்க தயாரான இவர்களிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்..?
நாம் எத்தனை அறிவுரை வழங்கினாலும் ஆட்சியாளர்கள் கண்களுக்கு புலப்படப்போவதும் இல்லை..!
காதுகளுக்கு கேட்கப்போவதும் இல்லை.!

இவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டுவது ஒன்றுதான் தென்தமிழகத்தை சீரழிக்கும் வன்முறை கலாச்சாரத்தில் இருந்து மீட்டெடுக்கும் தீர்வாகும்.!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD.,Ex MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.04.2025