தென்காசி – கீழப்புலியூரைச் சேர்ந்த குத்தாலம் என்ற வன்னியர் இளைஞர் கொடூர கொலை.! சட்டம்-காவல்துறை மீது சிறிதேனும் பயம் இருந்தால் இதுபோல நடக்குமா.?

அறிக்கைகள்
s2 42 Views
  • Dr Krishnasamy
  • Dr Krishnasamy
Published: 16 Apr 2025

Loading

தென்காசி – கீழப்புலியூரைச் சேர்ந்த குத்தாலம் என்ற வன்னியர் இளைஞர் கொடூர கொலை.!
சட்டம்-காவல்துறை மீது சிறிதேனும் பயம் இருந்தால் இதுபோல நடக்குமா.?

தென்காசி நகர எல்லைக்கு உட்பட்ட கீழப்புலியூர் என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய குத்தாலம் என்ற வன்னியர் சமூக இளைஞர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

காசி மேஜர் புரம் என்ற பகுதியைச் சேர்ந்த அவர் திருமணம் ஆனபின் மனைவியுடன் கீழப்புலியூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இன்று மதியம் (16.04.2025) மதியம் 3 மணியளவில் அங்குள்ள ரேசன் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை பின் தொடர்வதைக் கண்டு கடைக்குள் தஞ்சம் புகுந்துள்ளார். இருந்தும் அவரை விட்டு விடாமல் கடைக்குள் புகுந்த கொலையாளிகள் அவரை உள்ளே இருந்து வெளியே இழுத்து வந்து கொலை செய்ததுடன் அவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்று அவருடைய சொந்த ஊரான காசி மேஜர் புரம் அம்மன் கோயில் முன்பு வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

கீழப்புலியூர் தென்காசியின் கீழக்குப் பகுதியில் உள்ளது,காசி மேஜர் புரம் மேற்குப் பகுதியில் உள்ளது. இரண்டு பகுதிக்கும் ஏறக்குறைய 15 கிலோமீட்டர் தொலைவு இருக்கும். பட்டப்பகலில் கொலை செய்தது மட்டுமின்றி அவரது தலையை தென்காசியின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லையில் உள்ள அவரது சொந்த ஊரிலேயே வைத்துச் செல்லுகின்ற அளவிற்கு இந்த சம்பவம் கொடூரமாக நடந்துள்ளது.

நேற்று, பாளையங்கோட்டையில் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சக பள்ளி மாணவன் ஒருவனை அரிவாளால் வெட்டினான். இன்று, தென்காசி அருகே பட்டப்பகலில் ஒரு இளைஞரின் தலையை துண்டித்து 15 கிலோமீட்டர் எடுத்துச்சென்று அவரது சொந்த ஊர் கோயில் முன்பு வைக்கிறார்கள்.இது ஒரு நாகரிக சமூகமா.?
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்னால்,

எல்லாம் இங்கே சரியாகவே இருக்கிறது என்று தமிழக முதல்வர் கூறுகிறார்.
சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் சிறிதேனும் மதிப்போ, மரியாதையோ,அச்சமோ இருந்திருந்தால் இதுபோன்ற கொடூர கொலையை நடத்திட துணிவு வந்திருக்குமா.?

முதல்வர் ஸ்டாலின் அவர்களே இதற்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD.,Ex MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.04.2025