ஜனவரி 31 ஆம் தேதிக்குள், புதிய தமிழகம் கட்சி வெள்ளி விழா நல திட்ட உதவி நிகழ்ச்சிகளை நிறைவு செய்யுங்கள்.! புதிய தமிழகம் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் அறிக்கை
459 Views

![]()
ஜனவரி 31 ஆம் தேதிக்குள், புதிய தமிழகம் கட்சி வெள்ளி விழா நல திட்ட உதவி நிகழ்ச்சிகளை நிறைவு செய்யுங்கள்.!
புதிய தமிழகம் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் அறிக்கை
நமது கட்சியின் வெள்ளிவிழா துவக்கம் மற்றும் உலக இந்துக்கள் எழுச்சி, ஒருங்கிணைப்பு மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்குத் துணைநின்ற புதிய தமிழகம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்! இம்மாநாட்டில் பங்குபெற்று புதிய தமிழகம் கட்சியை வாழ்த்திய ஆன்மீகப் பெரியோர்கள் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள், அருட்திரு.மெய்தவம் அடிகளார் மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோருக்கு உங்கள் சார்பாகவும், நமது கட்சியின் சார்பாகவும் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 24 வருடத்தில் நமது கட்சியின் சார்பாக எண்ணற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தென்காசி–செங்கோட்டையில் நடைபெற்ற வெள்ளிவிழா மாநாடு என்பது இவை அனைத்திற்கும் முத்தாய் விளங்கிய மாநாடு. வரும் காலங்களில் நாம் நடத்தக்கூடிய மாநாடுகளில் மேடை அமைப்பு, ஒலி–ஒளி அமைப்புக்கள் உட்பட மாநாட்டினை எப்படி ஒழுங்காகவும், சிறப்பாகவும் நடத்துவது என்பதற்கு இம்மாநாட்டை ஒரு முன்னுதாரணமாகவும், அடையாளமாகவும் எடுத்துக் கொண்டு செயல்படும் அளவிற்கு இம்மாநாடு சிறப்புற அமைந்தது.
வரும் 2022 ஆண்டு முழுவதும் மாவட்டந்தோறும் நடைபெறவுள்ள புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாவட்ட மாநாடுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாநாடுகள் நடைபெறும் தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். மாநாடுகளுக்கான சுவரெழுத்து பிரச்சாரங்களை உடனடியாக துவக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வெள்ளி விழா மாநாட்டிற்கு முன்பு, நடைபெற்ற மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்த படி, அனைத்து கிராமங்களிலும் 2022 ஜனவரி மாதம் 31 ஆம் தேதிக்குள் வெள்ளி விழா நல திட்ட உதவி நிகழ்ச்சிகளை நிறைவு செய்திட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் கிராமம் தோறும் ஏழை, எளிய மக்களுக்குச் செய்யப்படுகின்ற சமூக நலப்பணிகளில் தினமும் 10 கிராமங்களிலாவது பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்ட நலப்பணிகள் செய்யப்படுகின்ற போதே கிளை கட்டமைப்பு, கிளை நிர்வாகிகளைத் தேர்வுகளையும் செய்திட வேண்டும். கிராம, கிளை மற்றும் ஒன்றிய அளவில் நமது கட்சி உட்கட்சித் தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெறும் என்ற காரணத்தினால் எல்லா பொறுப்பாளர்களும் கட்சி அமைப்பு பணிகளையும் மாநாட்டு அமைப்பு பணிகளோடு இணைத்து துரிதமாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்பொழுது நமக்கு உருவாகியுள்ள ’இந்துக்கள்’ என்ற பரந்துபட்ட தளத்தைப் பயன்படுத்தி அனைத்து சமுதாயத்தினரையும் புதிய தமிழகம் கட்சியின் அங்கத்தினராக்குவதற்கும், அவர்களுக்கு கிளை மற்றும் ஒன்றிய அளவில் பொறுப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பிப்ரவரி மாத இறுதிக்குள் எந்த தேதியிலும் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி தேர்தல் நடைபெறும் என்பதால் நாம் வெற்றி பெற வாய்ப்புள்ள வார்டுகளின் வேட்பாளர்களை உடனடியாக தேர்வு செய்து, ஆரம்ப கட்ட பணிகளை விரைந்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் ஜனவரி மாத இறுதியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வார்கள் என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
‘2024-ல் டெல்லியில் செங்கோட்டை – 2026-ல் தமிழ்நாட்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைவது‘ என்ற லட்சியத்தோடு நம்முடைய ஒவ்வொரு நகர்வும் இருந்திடல் வேண்டும்; பணியும் இருந்திடல் வேண்டும். விசுவாசம் மிக்க உண்மையான கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும், அர்ப்பணிப்போடும் நம்முடைய அரசியல் அதிகார மீட்பு இலட்சியத்தை வென்றெடுக்க ஆயத்தமாகுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
–தலைமை அலுவலகம்,
புதிய தமிழகம் கட்சி.
19.12.2021









