பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்களிக்க சட்டத் திருத்தம் வலியுறுத்தி, அமைச்சர் ராஜ்மோகனால் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானம் பலனளிக்குமா?

அறிக்கைகள்
s2 1 Views
Will the official resolution moved by Minister Rajmohan, urging a legal amendment to exempt serving teachers from the TET exam, yield results?
Published: 27 Aug 2026

Loading

பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்களிக்க சட்டத் திருத்தம் வலியுறுத்தி, அமைச்சர் ராஜ்மோகனால் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானம் பலனளிக்குமா?
………………………………………….

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, இந்தியா முழுமைக்கும் ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மத்திய அரசும் கொண்டு வந்தது; உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இதன் அடிப்படையில் நடைபெற்ற TET தேர்வில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் ’தமிழ்’ பாடத்திலேயே வெற்றி பெற முடியவில்லை. பிற பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுடைய ஒட்டுமொத்த சதவீதம் 95; அதாவது 5 சதவீதம் பேர் மட்டுமே TET (Paper 1 & Paper 2) தேர்வில் முழுமையாக வெற்றி பெற்றார்கள் என்றும், குறிப்பாக, 2010-க்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களால் இந்த TET தேர்வில் பெருமளவில் வெற்றி பெற முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அரசாங்கத்தினுடைய நேரடி பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரையிலும் பயிற்றுவிக்கக்கூடிய ஆசிரியர்களுடைய எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்து 28 ஆயிரம் ஆகும். அவர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் மீண்டும் TET தேர்வு நடைபெற்றுள்ளது.
”2010-க்கு முன்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்களிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தி—நேற்றைய தினம் (25.08.2026) சட்டமன்றத்தில் அரசினர் தீர்மானம் ஒன்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் முன்மொழிந்துள்ளார்.
இதை எப்படி மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் அல்லது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் எனத் தெரியவில்லை. இதை ஆசிரியர்களை சமாதானப்படுத்துவதற்கான ராஜ்மோகனின் ஒரு முயற்சியாகத்தான் கருத வேண்டுமே தவிர, இத்தீர்மானத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.!
விலக்கு கேட்டு மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, 6 மாதம் முதல் ஒரு வருடம் வரையாவது ஆசிரியர்களுக்கு தீவிரப் பயிற்சியளித்து TET தேர்வில் வெற்றி பெற வைப்பதன் மூலம் ஆசிரியர்களின் தரமும் உயரும்; அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரமும் மிளிரும். ஆசிரியர்களும் TET தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையோடும், யாருடைய கருணையை எதிர்பார்த்தும் பயணிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
எனவே, ஆசிரியர்களை தகுதிமிக்கவர்களாக மாற்றுவதை விட்டுவிட்டு, இதுபோன்று எடுக்கப்படும் நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக மட்டுமே பார்க்கப்படும். தமிழக அரசின் இந்த முயற்சி ”எலியைப் பிடிக்க மலையைக் குடைவதற்குச் சமமாகவே” கருதப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) 150-க்கு 90 மதிப்பெண்கள் (60%) பெற வேண்டும் என்ற விதியை தளர்த்தியதற்கு எதிரான வழக்குகளை வாபாஸ் பெற வைத்து, பணிபுரியும் ஆசிரியர்களிடத்தில் ஒருமித்தக் கருத்தை உருவாக்கி, அனைவரையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டியது அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் தலையாய முயற்சியாக இருக்கட்டும்; இதுபோன்று கடந்த காலங்களில் பல தேர்வுகளுக்கு விலக்குக் கேட்டு நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானங்கள் பலனளிக்கவில்லை; இனியும் பலனளிக்குமா என்பதும் கேள்விக்குறியே!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.08.2026