ரஷ்யா – உக்ரைன் போர்! யுத்தம் வேண்டாம்! அமைதியே வேண்டும்!! மார்ச் -11, சென்னையில் புதிய தமிழகம் பேரணி! தமிழக மக்களே திரண்டு வாரீர்!
318 Views
![]()
ரஷ்யா – உக்ரைன் போர்!
யுத்தம் வேண்டாம்! அமைதியே வேண்டும்!!
மார்ச் -11, சென்னையில் புதிய தமிழகம் பேரணி!
தமிழக மக்களே திரண்டு வாரீர்!
நேட்டோ எல்லை கிழக்கு ஐரோப்பா வரை விஸ்தரிப்பதை எதிர்த்தும்; உக்ரைனை நேட்டோ கூட்டமைப்பில் சேர்க்கவும் கூடாது என வலியுறுத்தியும் ரஷ்யா கடந்த 12 தினங்களாக உக்ரைன் நாட்டின் மீது ராணுவ தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இதன் விளைவாக இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும், உக்ரைன் நாட்டின் மக்களுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் 5,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உட்பட உலகின் பல்வேறு நாட்டு மக்களும் உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர். அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்யாவின் மீது விதித்த பொருளாதாரத் தடையின் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை இரு மடங்கு அதிகரித்துவிட்டது. போரில் சமந்தப்படாத பல நாடுகளின் பொருளாதாரமும் இதனால் பாதிக்கப்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நேட்டோ நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நேரடியாக போரில் ஈடுபடும் பட்சத்தில் இது உலக அணு ஆயுத யுத்தமாக வெடிக்கும் பேராபத்து உருவாகி உள்ளது.
எனவே, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கூடிய உக்ரைன் – ரஷ்யப் போரை உடனடியாக நிறுத்திட ரஷ்யாவும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளும் முன் வரவேண்டும் என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வரும் 11ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் வள்ளுவர் கோட்டத்திலிருந்து சென்னையில் உள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யத் தூதரகங்களை நோக்கி ’யுத்தம் வேண்டாம், அமைதியே வேண்டும்’ என்று வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது.
கோவையில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அரசியல் உயர்மட்ட குழு கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளிடத்தில் இதுபற்றி முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறுகிய காலகட்டம் என்றாலும் கூட, புதிய தமிழகம் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் பெருந்திரளான தொண்டர்களுடன் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தமிழகத்தில் உள்ள மனிதநேயம் கொண்ட அனைத்து சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
– டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
07.03.2022.





