ராகுல் பதவி பறிப்பு! இந்திய – தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமே.!

இனியாகினும் நிதானத்தோடும், சுய கட்டுப்பாட்டோடும் பேசுவார்களா? எழுதுவார்களா?

அறிக்கைகள்
s2 380 Views
  • டாக்டர் கிருஷ்ணசாமி

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • டாக்டர் கிருஷ்ணசாமி
Published: 26 Mar 2023

Loading

வயநாடு நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட செய்தி நாடெங்கும் பரபரப்பை உருவாக்கி உள்ளது; சர்வதேச அளவில் பேசப்படக்கூடிய நிகழ்வாக மாறி உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கர்நாடக தேர்தலின் போது ’மோடி என்ற பெயர் உடையவர்கள் எல்லாம் தவறிழைக்கிறார்கள்’ என்பதற்கு நிகரான ஒரு கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், அது குறிப்பிட்ட ஒரு சிலருடைய பெயர் மட்டுமல்ல, அதை ஒரு சமூகத்தினுடைய பட்ட பெயர், எனவே ராகுல் அவர்களுடைய பேச்சு ’மோடி’ என்ற பெயருடன் விளங்கக்கூடிய ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அவமதிக்கக் கூடியதாகும் என்று அகமதாபாத் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் அவருக்கு நேற்றைய தினம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் விதிகளின்படி உறுப்பினர் இரண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரு நீதிமன்றத்தால் தண்டனை பெறுவாராயின், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே அந்த குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதி தன்னுடைய பதவியை இழந்து விடுகிறார். அவ்விதிகளின்படி, நாடாளுமன்ற விவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராகுல் அவர்களுக்கு மக்களவை செயலகம் அனுப்பிய செய்தியின் அடிப்படையில் பதவியைத் துறந்து, நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற நேரிட்டது.

ராகுல் காந்தி அவர்கள் நேரு குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையைச் சார்ந்தவரும்; மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்கும் பொறுப்பிலிருந்து வரும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவரும் ஆவார்.

இந்திய நாட்டினுடைய சுதந்திரத்திற்காக அவர்களுடைய மூதாதையர்கள் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு செய்த தியாகங்களையும்; இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இந்த மண்ணிலேயே ரத்தம் சிந்தி உயிரிழந்ததையும் எவரும் மறுக்க முடியாது. எனவே இந்த நாட்டின் நூறு ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கிய பங்காற்றி இருக்கக்கூடிய ஒரு குடும்பத்தின் வழிவந்த ராகுல் காந்தி அவர்கள் பதவி பறிப்புக்கு ஆளானது பெரும்பாலான சாதாரண மக்களிடத்தில் வருத்தத்தையும், அனுதாபத்தையும் உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அரசியலில் அனுதாபங்களுக்கும், பரோபகார சிந்தனைகளுக்கும் இடம் இருப்பதில்லை.

வழக்கு, நீதிமன்றம், தண்டனை, பதவி பறிப்பு என்பது இதன் ஒரு பக்கம்; ஆனால் இன்னொரு பக்கத்தையும் மறைத்துவிட்டு கருத்துக்கள் சொல்ல இயலாது. காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ’பாரத தேசம்’ விடுதலை அடைந்து, தனக்கான அரசியல் சாசனத்தை உருவாக்கிக் கொண்டது. அவை பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை போன்ற பல உயரிய அம்சங்களை உள்ளடக்கியதே.! எனவே இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சுரிமையும், எழுத்துரிமையும், கருத்துரிமையும் தான் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கூறுகள். இந்த அடிப்படை கூறுகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திய அரசியல் சாசனத்தை எவராலும் பார்க்க இயலாது.

பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கூட, 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட அவசர பிரகடனத்தின் போது கூட நிறுத்தி வைக்கப்பட்டது. அடிப்படை உரிமைகள் மட்டுமல்ல உயிரையும் கூட பறிக்க முடியும் என்று அந்த காலத்தில் வாதிடப்பட்டது. எனவே, அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படை உரிமைகள் கட்டுப்பாடற்றது என்று எவரும் சொல்ல இயலாது. 1975 என்பதுக்கு பிறகு, அரசியல் சாசனத்தில் ஏற்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் ’Restricted – கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகம்’ என்ற அடிப்படையிலேயே அனைத்து உரிமைகளும் இப்பொழுது அமலில் இருக்கிறது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை இருக்கிறது என்பதற்காக யார் வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் எவர் மீதும் அல்லது தேசத்திற்கு எதிராக வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் பேசியும், எழுதியும் விட முடியாது. மற்றவர்களுடைய உரிமைகளும்; நம் நாட்டின் மதிப்பு, மரியாதைகள் பாதிக்கப்படாத வண்ணமே இந்த அடிப்படை உரிமைகள் பயன்படுத்தப்பட வேண்டும். இதுதான் இன்றைய அரசியல் சாசனத்தில் நிலவும் அடிப்படை அம்சமாகும்.

ராகுல் காந்தி அவர்கள் இந்திய அரசியல் மாண்பை அறியாத கட்சிக்கு தலைமை தாங்கக் கூடியவரும் அல்ல, அது போன்ற ஒரு குடும்பத்திலிருந்து வந்தவரும் அல்ல. ஆனால், அப்படி பொறுப்பு வாய்ந்த ஒருவரிடமிருந்து EXTEMPO என்று சொல்லக்கூடிய வகையில் தன்னிலை மறந்தோ, உணர்ச்சிவசப்பட்டோ, அவசரப்பட்டோ, ஆத்திரப்பட்டோ சில வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்ற பொழுது, அவை அவதூறு பேச்சாகவும் மாறிவிடுகின்றன; சட்ட மீறலாகவும் அமைந்து விடுகிறது. நாடாளுமன்றமோ அல்லது பொது வெளியோ எதிர் அணியின் குறைகளை – குற்றங்களை உரக்க பேசியும், அவர்களின் தவறுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியும் மட்டுமே பேசி ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் தவறிழைக்கக் கூடியவர்களாக இருந்தால் அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றி வரக்கூடிய நிகழ்வுகள் கடந்த 75 ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றன.

கொள்கை ரீதியாக, செயல் திட்டங்கள் ரீதியாக விமர்சனங்கள் என்பதையும் தாண்டி தனிப்பட்ட முறையில் அவர்களுடைய சுய கௌரவத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் சாதி, மத, இன ரீதியாக சிறுமைப்படுத்துவது அல்லது கொச்சைப்படுத்துவது; தனிப்பட்ட மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி அவதூறு பேசுவது; சிறிதும் ஆதாரமற்ற அபாண்டங்களை அள்ளி வீசுவது என்பவை எல்லாம் எவ்விதத்திலும் சட்டபூர்வமானது அல்ல.!

உரிமைகளை வழங்கிய அரசியல் சாசனம் ஒவ்வொருவர்களுக்குள்ளும் நுழைந்து இதைத்தான் பேச வேண்டும்; அதைத்தான் பேச வேண்டும் என்று வரையறை செய்ய இயலாது. எல்லை மீறிப் போகக் கூடாது என்ற பொதுவான நியதியை மட்டுமே அரசியல் சாசனம் விதித்திருக்கிறது. ராகுல் காந்தி அவர்களும் ஏதோ ஒரு சூழலில் நிதானத்தை இழந்து விட்டதாகவே கருத வேண்டி உள்ளது. இந்தியாவின் உயர்ந்த பதவியில் இருக்கக்கூடிய பிரதமரையும், பொருளாதாரக் குற்றம் புரிந்த சிலரையும் ஒப்பிட்டு, அது ஒரு சமூகத்தையும் கொச்சைப்படுத்தும் என்று கருத்தில் கொள்ளாமல் பேசியிருக்க கூடாது.

தமிழக – இந்திய அரசியலில் கடந்த 75 ஆண்டு காலமாக இதை விட ஆயிரம் மடங்கு இழிவாகவும் கேவலமாகவும் தங்களுக்கு எதிராக கருத்துச் சொல்லக்கூடிய சமூக அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்யும் அரசியல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களெல்லாம் எப்படியோ சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்; தொடர்ந்து தப்பித்து வருகிறார்கள். 1975 ஜூன் மாதம் 26 ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பொழுது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 20 அம்ச திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்த அவசரநிலை பிரகடனத்திற்கு பிறகு, 1976 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கோவையில் நடைபெற்ற அன்றைய ஆளுங்கட்சி மாநாட்டில் 20 அம்ச திட்டம் மட்டுமல்ல, விதவைகளுக்கான 21 வது அம்ச திட்டத்தையும் அமலாக்கி வருகிறோம் என்று முழங்கினார்கள். அன்னை இந்திரா காந்தியை விதவை என்று சொல்வதற்கு பதிலாக அப்படிக் கொச்சைப்படுத்தினார்கள். அவசர நிலை பிரகடனம் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, இந்திரா காந்தி அவர்கள் மதுரை வந்தார். அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அக்கட்சி நடத்தியது. அதில் இந்திரா காந்தி அவர்கள் தலை உட்பட உடம்பின் பல பகுதிகளில் காயமுற்றார்; அவரது உடை, உடல் எல்லாம் ரத்தம் களரியாயிற்று. அதற்கு பதில் சொன்ன அக்கட்சி தலைவர் “அது இந்திரா அவர்களின் தலையிலிருந்து வழிந்த ரத்தம் அல்ல, அது வேறு இடத்திலிருந்து வந்த இரத்தம்” என்று 60 வயதிற்கும் மேற்பட்ட பெண்மணி, முன்னாள் பிரதமர் என்றும் கூட பார்க்காமல் கொச்சைப்படுத்தினார்கள்.

அன்மை காலங்களாக இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்தில் தங்களுக்கு வேண்டிய தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் தங்களுக்கு உடன்படாத அரசியல் தலைவர்கள் மீதும், ஏன் ஆளுநர்கள் மீதும் கூட நான்காம் தர ஐந்தாம் தரப் பேச்சாளர்களை வைத்து அவர்கள் எப்படி எல்லாம் வசை பாடுகிறார்கள் என்பதெல்லாம் இந்த நாட்டு மக்களுக்குத் தெரியும். அவர்கள் எல்லாம் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். ராகுல் அவர்கள் ஒரு முக்கிய விஷயத்தைச் சுட்டிக்காட்ட முற்பட்டபோது, சில வார்த்தைகளை உணர்ச்சி வசப்பட்டு பயன்படுத்தியதே இன்று அவருக்கு பதவி பறிப்பு அளவிற்குச் சென்றுள்ளது.

நீதிமன்ற மேல்முறையீட்டில் வழக்கு ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் பதவியைப் பெறலாம். அது வேறு. ஆனால் ராகுல் அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு, அவருக்குக் கிடைத்த தண்டனை, பதவி பறிப்பு என்பதெல்லாம் இந்திய அரசியல் வாதிகளுக்கு மேடைகளில், ஊடகங்களில் பேசுகின்ற பொழுது சுய கட்டுப்பாடுகள் தேவை; மிகுந்த நிதானம் தேவை என்ற பாடத்தை மட்டும் எடுத்துச் சொல்கிறது.

இனியாகினும் தமிழக – இந்திய அரசியல்வாதிகள் வருங்காலங்களில் நிதானத்தோடும், சுய கட்டுப்பாட்டோடும் பேசுவார்களா? எழுதுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
26.03.2023