பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு – பஞ்சாப் மாநில அரசு பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்!
439 Views
![]()
பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு
பஞ்சாப் மாநில அரசு பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்!
பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் இன்று 42,750 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகச் சென்ற பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மோசமான வானிலை காரணமாக தன்னுடைய பயணத் திட்டத்தை ஹெலிக்காப்டரில் செல்வதற்கு பதிலாக சாலை மார்க்கமாகச் செல்ல முடிவெடுத்து இருந்ததாக தெரிகிறது. எப்பொழுதுமே முக்கியப் பிரமுகர்கள் பயண திட்டத்தில் இதுபோன்று மாற்றம் செய்யப்படுவது தான் வழக்கம். பிரதமர் அவர்கள் பதிண்டா விமான நிலையத்திலிருந்து ஹெலிக்காப்டருக்கு பதிலாக சாலை மார்க்கமாகச் செல்ல முடிவெடுத்த உடனேயே அவர் செல்லுகின்ற பாதை முழுமைக்கும் மாநில அரசு தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் சென்றடைய வேண்டிய இடத்திற்கு முன்பாக ஹூசைனிவாலா பகுதியில் மிக முக்கியமான பாலத்தையே வழிமறித்து போராட்டம் செய்ய எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை? போராட்டத்திற்கு முன்பே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் கூட, பிரதமரின் பயணம் சாலை வழி என தெரிந்தவுடனையே மாநில அரசு அப்போராட்ட அனுமதியை ரத்து செய்துவிட்டு போராட்டக்காரர்களை முழுமையாக அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால், பஞ்சாப் மாநில அரசு பிரதமரின் பாதுகாப்பை ஏன் சரியாக கையாளவில்லை என தெரியவில்லை. இதில் மாநில அரசு முழுமையாக உள்நோக்கத்தோடு செயல்பட்டதாகவே கருத முடிகிறது. அதுவும் ஒரு பாரதப் பிரதமர் அவர்கள் தன்னுடைய பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப டெல்லி செல்லும் நிலை ஏற்பட்டிருப்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல.
இன்று ஏற்பட்ட இந்த நிகழ்வுகளுக்கு பஞ்சாப் சன்னி அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். மத்திய அரசின் உள்துறையும் இதை முழுமையாக விசாரித்து பிரதமர் அவர்களின் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– டாக்டர் கிருஷ்ணசாமி. எம்.டி
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.01.2022






