இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்களுக்கு வாழ்த்தும், பிரதமர் மோடி அவர்களுக்கு பாராட்டும்.!
498 Views
![]()
இந்தியக் குடியரசின் மிக உயர்ந்த பதவி ஜனாதிபதி ஆகும். அவரே முதல் குடிமகனும், இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாவலரும் ஆவார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அப்பதவிக்கு ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிந்து, புதிய ஜனாதிபதி பொறுப்பேற்கும் பொருட்டு தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய வேட்பாளராக ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முன்னாள் ஜார்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு அவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
பள்ளி ஆசிரியையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின் வார்டு கவுன்சிலராகி, இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரிசா மாநிலத்தில் அமைச்சராகவும், முன்னாள் ஜார்க்கண்ட் மாநில கவர்னராகவும் பதவி வகித்த அவர் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ஒரிசா மாநிலத்தின் மிக மிகப் பின்தங்கிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்தியாவில் ஏழரை சதவீதத்திற்கு மேற்பட்டு வாழக்கூடிய பழங்குடியின பெண்மணி ஒருவரை மிக உயர்ந்த பதவிக்கு வேட்பாளராக நிறுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிந்த பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், பாஜக தேசிய செயலாளர் நட்டா அவர்களுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சியினருக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முர்மு அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பினும், மிகமிக எளிய பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி என்ற பின்புலத்தின் அடிப்படையில் அவருக்கு இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏகமானதாக ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். திரௌபதி முர்மு அவர்கள் அமோகமான வெற்றி பெற்று, தான் பிறந்த சமுதாயத்திற்கு மட்டுமன்றி, பாரத தேசத்திற்கு உலகளவில் மிகப் பெரிய நன்மதிப்பையும் மரியாதையையும் உருவாக்குவதோடு; இந்தியாவை ஒரு வலுவான தேசமாக உருவாக்கிட அவர் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
21.06.2022.






