நெல்லை ஜாகீர் உசேன் படுகொலையில் வெற்று வீராப்பு அறிக்கையால் என்ன பயன்?
341 Views
![]()
நெல்லை ஜாகீர் உசேன் படுகொலையில்
வெற்று வீராப்பு அறிக்கையால் என்ன பயன்?
தென் தமிழகத்தில் குறிப்பாக திருநெல்வேலியில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளை தடுத்து நிறுத்த தமிழக காவல்துறை சிறப்பு கவனம் செலுத்திட வேண்டுமென்று தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்தி வருகிறோம்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லை முன்னாள் காவல்துறை சார்பு ஆய்வாளர் ஜாகீர் உசேன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் . இச்சம்பவத்திற்கு புதிய தமிழகம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பவம் நடந்தவுடன் மதரீதியிலான மோதலாக இருக்குமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால், கொலை செய்யப்பட்டவரும் கொலைப் பழிக்கு ஆளானவரும் அதே மதத்தை சார்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது. இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான சொத்துத் தகராறே கொலையில் முடிந்திருக்கிறது. எனினும், ஜாகீர் உசேன் அவருக்கு இருந்த ஆபத்து குறித்து பலமுறை வீடியோ வெளியிட்ட பின்னரும் காவல்துறை அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க தவறியது ஏன்? நெல்லையில் தினமும் ஒரு கொலை நடக்கிறது. குற்றம் சாற்றப்பட்டவர்கள் பட்டியல் வகுப்பிலிருந்து மதம் மாறிய பின்னணியை கொண்டவர்கள் என்பதால் பாரபட்சம் காட்டி சுட்டுப் பிடிக்கிறார்கள் இது என்ன நியாயம் ? கொலையை தடுப்பதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் தடுக்க தவறிவிட்டு தற்போது குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டோம் என வெற்று வீராப்பு அறிக்கை விடுவதால் என்ன பயன் ?
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MlA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
20.03.2025





