சமூகநீதி பேசும் திமுக அரசு இட ஒதுக்கீடுகளை முறையாக அமல்படுத்த வேண்டும்.!

சமூகநீதி பேசும் திமுக அரசு இட ஒதுக்கீடுகளை முறையாக அமல்படுத்த வேண்டும்.!
இட ஒதுக்கீடு வழங்குவதில், சமூக நீதியை நிலை நாட்டுவதில் முன்னோடி மாநிலம் என்று இன்றைய திராவிட ஆட்சியாளர்கள் தங்களை மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆனால் இவர்களுடைய ஆட்சியில் குறிப்பாக அண்மையில் அறிவிக்கப்பட்ட காவல் சார்பு ஆய்வாளர்கள் தேர்வில் நடந்திருக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய மோசடியை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
சார்பு காவல் ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் இட ஒதுக்கீடு தவறாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளது. புதிதாக முறையான இட ஒதுக்கீடு அடிப்படையில் பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தியுள்ளது. வழக்கமாக 69% இட ஒதுக்கீடு மூலமும், மீதமுள்ள 31% பொதுப் பட்டியல் மூலமும் தேர்வு செய்து பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். சமூக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக கட் ஆப் மதிப்பெண் வைத்துள்ளவர்கள் பொதுப்பட்டியலில் தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஆனால், தற்போது கூடுதல் மதிப்பெண் பெறும் BC, MBC, SC மாணவர்களை பொதுப் பிரிவில் சேர்க்காமல் அவரவர் சாதிப் பிரிவு இடங்களிலேயே நிரப்பி உள்ளனர். இது இட ஒதுக்கீடு கொள்கைக்கு நேரெதிரானதாகும். இதன் அதன் மூலமாக BC, MBC, SC பிரிவு மாணவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டு, புதுப்பட்டியில் தயாரிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் 1,299 சார்பு ஆய்வாளர்கள் பதவிக்கு கடந்த மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில் திறந்தவெளி போட்டியின் மூலம் 31 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும், பட்டியல் பிரிவினருக்கு 15 சதவீதமும், பட்டியல் பிரிவு அருந்ததியினருக்கு 3 சதவீதமும் வழங்கிவிட்டு, தகுதி வாய்ந்த அருந்ததியினர் இருந்தால் அவர்களை பொதுப் பட்டியலுக்கு மாற்றாமல், எஞ்சியுள்ள பட்டியல் பட்டியல் பிரிவினருக்கான 15 சதவிகிதத்திலும் போட்டியிடலாம் என்று அறிவித்து இருக்கிறார்கள். இது 15 சதவீதத்திற்குள் மட்டுமே போட்டியிடக்கூடிய தேவேந்திரகுல வேளாளர்கள், ஆதிதிராவிடர் (பறையர்) மக்களையும், மற்றவர்களையும் பெரிதும் பாதிக்கக் கூடியதாகும். இதுபோன்ற தவறான நடைமுறையை அமலாக்கி கடந்த 15 வருடங்களாகப் பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கும், ஆதி திராவிடர் பறையர் சமூகத்திற்கும் கிடைத்துவிடாமல் அபகரித்து வருகிறார்கள்; இது மிகவும் மோசடியானது.
”படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்” என்பதற்கேற்ப சமூக நீதி பேசிக்கொண்டு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக அரசு தொடர்ந்து செயல்படுகிறது. எனவே, 18 சதவிகித பட்டியல் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் மட்டும் அருந்ததியருக்கு கொடுக்க வேண்டுமே தவிர, எஞ்சியுள்ள 15 சதவீதத்திலும் அருந்ததியரை அனுமதிக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
28.04.2025