9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15க்குள் நடத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு – உடனடியாக தமிழக அரசு மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
402 Views
![]()
9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15க்குள் நடத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு – உடனடியாக தமிழக அரசு மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
கரோனா இரண்டாவது அலையின் தாக்குதல் முதல் அலையின் தாக்குதலை விட அதிகமாக இருந்ததன் விளைவாக இந்தியத் தேசமெங்கும் நகர்ப்புறங்களைத் தாண்டி கிராமப்புறங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கொத்துக் கொத்தாக மடிந்தனர். நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் கிடைக்கவில்லை; மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை; ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவற்றால் தமிழக மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கக் கூட மயானங்கள் கிடைக்காமல் தமிழக மக்கள் தத்தளித்து வந்தனர். கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகினர். இன்னும் 10 சதவீதம் பேர் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இதற்கிடையில் இன்னும் 6-8 வாரங்களில் கரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் நிதி ஆயோக் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்ற அச்சமும் உள்ளது
எனவே, கரோனா மூன்றாவது அலையின் தாக்குதலை எப்படி தடுப்பது? மற்றும் சமாளிப்பது என்பது குறித்தும், அதற்குண்டான பல ஆயத்த பணிகளை மாநில அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய நேரமிது. எனவே இரண்டாவது அலைக்கான ஊரடங்கே இன்னும் முழுமையாகத் தளர்வு செய்யப்படாத நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இது தேர்தல் நடத்த உகந்த நேரம் அல்ல. குறைந்தது 50% பேர் தடுப்பூசி போடும் வரை எந்த தேர்தலையும் நடத்த இயலாது என்பதை எடுத்துச் சொல்லி உச்சநீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்கத் தமிழக அரசு மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
22.06.2021






