அனைவரது உள்ளத்திலும் ‘அன்பு’ எனும் ஒளி பிரகாசிக்கட்டும்! ‘இயேசு கிறிஸ்து’ பிறந்த நாளான ‘கிறிஸ்துமஸ்’ நல்வாழ்த்துக்கள்
428 Views
![]()
அனைவரது உள்ளத்திலும் ‘அன்பு’ எனும் ஒளி பிரகாசிக்கட்டும்!
‘இயேசு கிறிஸ்து’ பிறந்த நாளான ‘கிறிஸ்துமஸ்’ நல்வாழ்த்துக்கள்
உலகெங்கும் வாழும் அனைத்து கிறித்தவ மக்களுக்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை அற்புதமானது. நேர்மையின் சின்னமாக விளங்கியவர் அவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கண் முன்னே நடந்த பல சமூக அவலங்களைக் கண்டு மனம் வருந்தினார். அவர் தானே களமிறங்கி மக்களின் துயர் போக்க தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சமூகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களான குஷ்டரோக வியாதிஸ்தர்கள், ஏழைகள் உட்பட நலிந்தவர்களைத் தேடிச்சென்று அவர்களுக்குத் துணையாக நின்றார். சட்டம், நியாயங்களுக்குப் புறம்பான வழிகளில் ஈடுபட்டு சமூக சகதியில் சிக்குண்டவர்களின் பழி, பாவங்களையெல்லாம் தன்மேல் போட்டுக்கொண்டு அவர் சிலுவையானார். மீண்டும் உயிர்பெற்று எழுந்து ஒவ்வொருவருடைய மனதிலும் அன்பை புகுத்தி அவர்களை நல்வழிப்படுத்தினார்.
இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லுகின்ற போது அவரது இலட்சியங்களை முழுமையாக நிறைவேற்றக் கூடிய அளவில் ஒவ்வொருவரும் செயல்படுவதே உண்மையான கிறிஸ்தவம் ஆகும். அவர் யாரிடத்திலும் பகைமை பாராட்டாமல்; பிரிவினையைத் தூண்டாமல்; வேறுபாடுகளை உருவாக்காமல்; பொய், புரட்டுகளைச் சொல்லாமல் ‘அன்பு’ என்ற ஒரே ஒரு ஒளியை மட்டும் ஒவ்வொருவருடைய இதயத்திலும் புகுத்தினார். அந்த மகத்தான ‘இயேசு கிறிஸ்து’ பிறந்த நாளே ‘கிறிஸ்துமஸாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்து பிறப்பின் ஒரே அடிப்படை இலட்சியம் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பை பரிமாறிக்கொள்வது ஆகும். எனவே, இந்த மகத்தான கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகெங்கும் உள்ள அனைத்து உயிர்களிடத்திலும், மனிதர்களிடத்திலும், அனைவரது உள்ளத்திலும் ‘அன்பு’ எனும் ஒளி பிரகாசிக்கட்டும் என்பதே கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ஆகும்.
டாக்டர்.க. கிருஷ்ணசாமி, MD
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
25.12.2021






