2026 இல் வெறும் கூட்டணி மட்டுமில்லாமல் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.!

2026 இல் வெறும் கூட்டணி மட்டுமில்லாமல் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த 2009 முதல் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட பிரிவினருக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு தனியாக வழங்குவது மட்டுமின்றி எஞ்சி இருக்கும் 15 சதவீதத்திலும் முன்னுரிமை கொடுத்ததன் விளைவாக ஏறக் குறைய 15க்கும் மேற்பட்ட முக்கியமான பணியிடங்கள் குறிப்பிட்ட சாதியினருக்கே சென்றுள்ளது.
இட ஒதுக்கீடு – மே 17 ம் தேதி ஆர்ப்பாட்டம்!
எனவே தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ள மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அரசின் சட்டத்திற்கு புறம்பான இட ஒதுக்கீட்டால் ஒட்டு மொத்தமாக SC வகுப்பினர் பாதிக்கப்படுகிறார்கள். இந்த அறிவிப்பால் 15 ஆண்டு காலமாக மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது போன்ற அறிவிப்பு இல்லை. சமூக நீதி என்று பேசிக் கொண்டு சமூக நீதியின் கழுத்தை திமுக அறுக்கிறது.
சமூக நீதிக்கு புறம்பான மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி வருகின்ற மே 17ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தமிழக அரசு சமூக நீதி பேசினால் மட்டும் போதாது அதை நடை முறைப்படுத்த வேண்டும்.
இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டுமென அரசியல் ரீதியாக நான் கூறவில்லை. அரசு செய்யும் தவறை சுட்டிக் காட்டி நான் கூறுகிறேன். இந்தப் போராட்டத்தில் இருந்து விலக மாட்டேன். மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவேன்.
ஜாதி பெயர்களை நீக்க வேண்டும்!
தென் தமிழகத்தில் சாதிய படுகொலைகள் அதிகமாகி விட்டன.. பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. பள்ளிகளில் அரிவாள் வன்முறை கலாச்சாரங்கள் பரவ தொடங்கி விட்டது. அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் ஜாதிய பெயர்களை வைக்கக் கூடாது என உயர் நீதிமன்ற ஆணையை பின்பற்றி உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ள காலத்திற்குள் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஜாதிய பெயர்களை அரசு நீக்க வேண்டும்.
ஜாதிய பெயர்களை நீக்காத பள்ளி கல்லூரிகளுக்கு நிதி வழங்குவதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அடிப்படை ரீதியில் இரண்டு திராவிட கட்சிகளுமே ஜாதியை படுகொலைகளுக்கு எதிராக பேசுகிறார்களே தவிர படுகொலைகளை தவிர்க்க எதுவும் செய்யவில்லை. 50 ஆண்டு கால அதிமுக , திமுக திராவிட ஆட்சியின் அவலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் அரிவாள் எடுக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது..
பல்கலைக் கழகங்கள் ஊழல் கழகங்களாக மாறியதற்கு காரணம் துணை வேந்தர்கள் நியமனம் தான். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை , அது தான் அதிமுக – பாஜக கூட்டணி., தமிழ்நாட்டில் வெறும் அரசியல் மாற்றம் மட்டும் ஏற்பட்டால் போதாது. அடிப்படையில் சில மாற்றங்கள் நிகழ வேண்டும். புதிய தமிழகம் கட்சி கொடியை என்றாவது தலைமைச் செயலக கோட்டையில் பறக்க விட வேண்டும் என்று தான் கட்சியை உருவாக்கினோம்.
தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி!
2026 இல் புதிய தமிழகம் கட்சியின் முழக்கமே ஆட்சியிலும் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தான். ஆட்சியில் பங்கு என யார் கூட்டணி அமைக்கிறாரோ அவருடைய கூட்டணியில் தான் நிபந்தனையாக இருக்கும். 2026 இல் வெறும் கூட்டணி மட்டுமில்லாமல் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதை அடிப்படையாக வைத்து தான் கூட்டணியை அமைப்போம். கூட்டணி குறித்து இப்போது முடிவெடுக்க இயலாது. தேர்தல் நெருங்கும் போது யார் கூட்டணி ஆட்சி என விளங்குகிறாரோ அவரோடு தான் கூட்டணி வைப்பது குறித்து முடிவெடுக்க இயலும்.
தவெக – வுன் கூட்டணியா?
விஜய் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு தயார் எனக் கூறியுள்ளார். அவரை வரவேற்கிறேன். இதைத் தான் அமித்ஷாவும் கூட்டணி ஆட்சி என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதிமுகவினர் அதை எப்படி புரிந்து கொண்டுள்ளார்கள் என தெரியவில்லை.
அமைச்சர் பொன்முடி தகுதியற்றவர்!
திமுகவில் பல அமைச்சர்கள், பல சட்டமன்ற உறுப்பினர்கள் சிரிப்பு என்ற பெயரில் வரம்பு மீறி பேசுகிறார்கள். ♪ அமைச்சர் பொன்முடியின் பேச்சு 1980 களில் திமுக , அதிமுக மேடைகளில் இருந்தது. அதை இப்போது மீண்டும் பேச தொடங்கியுள்ளார். அமைச்சர் பொன்முடி அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர். அவரை ஏன் முதல்வர் அமைச்சர் பொறுப்பில் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை. உடனடியாக அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தார்.
செய்தி – ABP News