தைவான் விமான விபத்தில் நேதாஜி மரணமெய்தியது உண்மையா? இனியாவது மர்மம் விலகுமா?
343 Views
![]()
’மதிப்புமிக்கத் தலைவர்’ என்று இந்திய மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வரலாற்றை மறைத்து விட்டோ, மறந்து விட்டோ இந்தியச் சுதந்திரத்தை எவராலும் எண்ணிப்பார்க்க முடியாது. அவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே தேதியான 18 ஆம் தேதி விமான விபத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர் மரணம் குறித்த அறிவிப்பில் மர்மம் இருக்கிறது என்றே இந்திய மக்கள் கருதி வருகிறார்கள்.
’இந்திய நாடு’ சுதந்திரம் பெற்ற பிறகு, அவரை பல்வேறு இடங்களில் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் பார்த்தாக தெரிவித்த சம்பவங்களும்; 1966 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இரஷ்யாவில் உள்ள ’டாஸ்கண்ட்’ நகரத்தில் அன்றைய இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரிக்கும், பாகிஸ்தான் பிரதமர் அயூப்கானுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் போது பின்னால் நின்று கொண்டிருந்தவர் நேதாஜி தான் என்றும் அன்றைய நாட்களில் பரபரப்பாகப் பேசப்பட்டன. அந்த மகத்தான சுதந்திரப் போராட்ட வீரருடைய மறைவு குறித்து பொதுத் தளங்களிலும், நாடாளுமன்றத்திலும் பலமுறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் அது குறித்து உண்மை வெளியிடப்படும் என்று பல அரசுகள் சொல்லி இருந்தாலும் கூட, இன்று வரையிலும் அந்த மர்மம் குறித்து எந்த அறிக்கையும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அந்த உண்மை வெளியே தெரிய வேண்டும் என்பதே இந்திய மக்கள் அனைவரது எதிர்பார்ப்பு ஆகும்.
ஏனெனில், அவர் சாதாரணமாக பத்தோடு பதினொன்றாக முழக்கம் போட்டுச் சென்றவரல்ல. The Sun Never Sets In The British Empire என்று சொல்லப்பட்ட, 300 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக இராணுவப் படையைக் கட்டியமைத்தவர். அந்த மகத்தான தலைவருடைய எல்லா விதமான வரலாற்று உண்மைகளும் வெளிக்கொணரப்பட வேண்டும். சுதந்திரத்தின் போது நாடு துண்டாடப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து வெளியே வருவதற்கும், புதிதாக இந்திய மக்களால் அமைக்கப்பட்ட ஒரு அரசு தன்னை முழுமையாக நிலைநிறுத்திக் கொள்வதற்கும் சில காலம் பிடித்திருக்கும் என்பதால் ஆரம்பக் காலங்களில் அதற்கான விசாரணையைத் தீர்க்கமாக மேற்கொள்ளாமல் இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
இப்பொழுது 74 ஆண்டுகள் கழித்து 75 வது ஆண்டில் அடியெடுத்து வைத்து இருக்கிறோம். எனவே ’நேதாஜி’ என்றழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் மரணம் குறித்தான மர்மங்கள் விலக்கப்பட வேண்டும். சமூக, அரசியல், பொருளாதார, மற்றும் தேச விடுதலைக்காகப் போராடும் சிறிய அல்லது பெரிய எந்த போராளியாக இருந்தாலும் அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை இந்த நாட்டு மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு இந்த தேசத்திற்கு உண்டு.
சுதந்திரத்தை முன்னின்று நடத்திய காந்தியார், நேரு, பட்டேல், பாலகங்காதர திலகர், பாரதி, வ.உ.சி போன்றோரைப் பற்றி எல்லாம் நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தையே திணறடித்த, அச்சமூட்டிய, அதிரவைத்த மகத்தான அந்த தலைவரது வரலாற்றின் கடைசி பக்கம் மர்மாகவே இருந்து விடக்கூடாது. அது முழுமையாக நிரப்பப்பட வேண்டும். அவருடைய வரலாற்றைத் தெரிந்து கொண்டாலே இன்றைய இளைஞர்களுக்குத் தேசப்பற்று தானாகவே பொங்கி எழும்.
ஆம், 1897-ல் ஒரிசாவில் உள்ள கட்டாக் நகரில் ஜானகிநாத் என்ற பிரசித்தி பெற்ற வழக்கறிஞருக்கும், பிரபாவதி தேவியாக்கும் ஏழாவது மகனாகப் பிறந்தவர். வீரமும், திறனும் மிக்கவர். அன்று இந்தியாவை ஆளுவதற்காக இங்கிலாந்து அரசால் நடத்தப்பட்டு வந்த இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வை இலண்டனுக்கே சென்று எழுதி, அதில் முதல் முறையிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றும் கூட, கோடான கோடி இந்திய மக்களை அடிமைப்படுத்தும் இங்கிலாந்து அரசின் அதிகாரியாகச் செயல்பட மாட்டேன் என அப்பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, காங்கிரஸில் இணைத்து தன்னை முழுமையாக இந்தியச் சுதந்திரத்திற்கான அர்ப்பணித்துக் கொண்டவர்.
1938-ல் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அன்று சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய காந்தியார் அவர்கள் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தலைமையை விரும்பாத காரணத்தினால் 1939 ஆம் ஆண்டு தான் உடல் நலம் சரியில்லாத போதும் மருத்துவமனை ஸ்டெச்சரிலேயே வந்து தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து மூத்த தலைவர் பட்டாபி சீதாராமையா அவர்களுக்கு வழிவிட்டு வெளியேறினார். ஆனால் அன்று அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் வெளியேறினாரே தவிர, இந்தியத் தேசத்தை விடுதலை செய்வதிலிருந்து இம்மியளவும் விலகவில்லை.
1940-இல் கல்கத்தாவில் ஒரு சிறிய போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆங்கிலேயரால் சிறை பிடிக்கப்பட்டார். பின் அதிலிருந்து தப்பிச் சென்று ஆப்கான் வழியாக 1941 இல் ஜெர்மனி சென்றடைந்தார். ஜெர்மனியில் அவர் ’சுதந்திர இந்தியா’ என்ற பெயரில் ஒரு வானொலியை நடத்தி ஒவ்வொரு நாளும் இந்தியர்களுக்குச் சுதந்திரத் தாகத்தை ஊட்டி வளர்த்து வந்தார். ஜெர்மனியிலிருந்து கொண்டே இந்தியாவிலிருந்த ஆங்கிலேயரை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் ’இந்தியா தேசிய இராணுவ’த்தைக் (INA – INDIAN NATIONAL ARMY) கட்டமைக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இரண்டாம் போர் உச்சக்கட்டமாக நடந்து கொண்டிருந்த அக்காலகட்டத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று Axis-அச்சு நாடுகளும் கூட்டணி அமைத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் குறி வைத்தே தனது தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருந்தன. ஜெர்மனி உதவினால் இராணுவ நடவடிக்கை மூலமாக பிரிட்டிஷ் இராணுவத்தை இந்தியாவிலிருந்து வெளியேற்றலாம் எனக் கருதிய அவர் ஜெர்மனி அதிபர் ஹிட்லர் உதவியை நாடினார். ஓராண்டு கழித்து 1942-ல் நேதாஜி-ஹிட்லர் சந்திப்பு நடைபெற்றது.
ஆனால், பூகோள ரீதியாக இந்தியாவிற்குள் ஜெர்மனி நுழைய முடியாத அளவிற்கு பல நாடுகள் குறுக்கே இருந்தன. எனவே, வேறு இராணுவ தந்திரோபயங்கள் கையாளப்பட்டு 1942 ஆம் ஆண்டு ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக முதலில் மடகாஷ்கர் தீவுக்கும், பின் மடகாஷ்கர் தீவிலிருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக சுமத்ரா தீவையும் சென்றடைந்தார். பின் ஜப்பானியப் படைகளின் உதவியுடன் பர்மா, சிங்கப்பூர், மலேசியா இந்தியர்களிலிருந்து தேசப்பற்று மிக்க இளைஞர்களைக் கொண்ட இந்தியத் தேசிய இராணுவத்தை (INA) கட்டியமைத்தார். அதில் அதிகமாக தமிழர்களே கலந்து கொண்டார்கள் என்பது ஒரு வரலாறு.
ஜப்பான் நாட்டு உதவியுடன் அன்று ஜப்பான் நாட்டின் கீழ் இருந்த அந்தமான் நிகோபர் தீவுகளில் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தலைமையில் ’இந்தியச் சுதந்திர மாதிரி அரசு’ ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அன்றைய கால கட்டங்களில் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், அதிநவீன தடவாளங்களைக் கையாள்வதற்கும் இந்தியத் தேசிய இராணுவத்திற்கு வாய்ப்பில்லை. இதை நன்கு அறிந்த நவீன ஆயுதபாணியான பிரிட்டிஷ் இராணுவம் ஜப்பான் மற்றும் நேதாஜி அவர்களின் இந்தியத் தேசிய இராணுவத்தையும் கடுமையாகத் தாக்கி பல்லாயிரக்கணக்கான வீரர்களையும் கொன்று குவித்தது. நேதாஜி அவர்களைச் சரணடையப் பிரிட்டிஷ் உத்தரவிட்டது.
ஆனால் அந்த மாவீரர் பிரிட்டிஷ் அரசிடம் சரணடைய மறுத்து மங்கோலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றார் என்றும், சிங்கப்பூரிலிருந்து இராணுவ தண்டவாளங்களையும், வெடி மருந்துகளையும் ஏற்றிச் சென்ற ஜப்பான் விமானத்தில் பயணித்த அவர் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இது வெறும் கட்டுக்கதை. அவர் ஜப்பானியப் படைகள் தோல்வியுறும் நிலையிலிருந்ததால் இரஷ்ய உதவியைப் பெற சிங்கப்பூர் தப்பிச் சென்று விட்டார். அவர் உயிரோடுதான் இருக்கிறார் என பல வருடம் பேசப்பட்டது. அதுவே இன்று வரையிலும் நிலவுகிறது.
இன்று எவ்வளவோ நவீனம் வளர்ந்து விட்டன. பல நாடுகள் கடந்த கால போர் அனுபவங்களை வெளிப்படையாக இப்பொழுது பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தியாவின் சுதந்திரப் போர் பல கட்டங்களைக் கொண்டது. 1850 சிப்பாய் கலகம்; காங்கிரஸ் துவங்கிய பின், 20 ஆண்டுக்காலம் பாலகங்காதர திலகர்; அதன் பின் காந்தியார் அவர்களின் ஆதிக்கம்; 1940 லிருந்து 1945 வரையிலும் பிரிட்டிஷ் அரசுக்கும், இராணுவத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் நேதாஜி அவர்கள். எனவே அவரது மரணம் விபத்தால் ஏற்பட்டது என்பதை எந்த இந்தியரும் இன்று வரை ஏற்றுக்கொள்ள வில்லை. அவருடைய போராட்ட வரலாறும், அவருடைய உண்மை நிகழ்வுகளும் இந்திய நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இப்போது அவருடைய மரணம் நிகழ்ந்து 76 வருடங்கள் நிறைவுற்று விட்டன. ஏற்கனவே பல ஆணையங்கள் அமைக்கப்பட்டு அவருடைய மரணம் குறித்து விசாரிக்கப்பட்டும் விட்டன. ஆனால் எந்த அறிக்கையும் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை. வாஜ்பாய் காலத்தில் கூட ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் விபரங்களும் வெளியிடப்படவில்லை. அவர் பத்தோடு பதினொன்று அல்ல, “He Was A Patriot Of Patriots”.
எனவே அவரது வரலாற்றின் கடைசி பக்கம் கருப்பாக இருந்து விடாமல் அவரது மரணம் குறித்த மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு அவரது முழுமையான வரலாறுகளை வெளிக்கொணருவதே அவருக்கு இந்த நாடு செலுத்தும் மரியாதையாகும்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
18.08.2021






