உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்
தேதி: 07 பிப்ரவரி 2010
இடம்: கோவை - வ.உ.சி மைதானம்
1. தமிழீழ விடுதலைப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தமிழ் நிலத்து தியாகதீபம் முத்துகுமார் மற்றும் உலகெங்கிலும் ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிர் ஈந்த 19 தியாகிகளுக்கும் இந்த மாநாடு வீர வணக்கம் செலுத்துகின்றது.
2. தங்களது சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காக 60 ஆண்டுகளாகப் போராடும் ஈழத்தமிழர்கள் மீது, இனப்போரை ஏவி தமிழின அழிப்பை நடத்திய இராஜபக்சே அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கின்றது.
3. வன்னிப்போரில் ஒரே நாளில் 70,000 தமிழர்களைக் கொலை செய்து, போரின் முடிவில் ஒரு இலட்சம் தமிழர்களைப் பலியாக்கி, 3 இலட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் வதை செய்யும் இராஜபக்சே அரசைக் கண்டிக்காமல் அமைதி காத்து, அதற்குத் துணையாக இருக்கும் இந்திய அரசையும், தமிழக அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
4. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களையும், மனிதஉரிமை மீறல்களையும் குறிப்பிட்டு நடவடிக்கையில் இறங்காத ஐக்கிய நாடுகள் சபையின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கின்றோம்.
5. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாவதை இம்மாநாடு வரவேற்கின்றது. அது இன்றைய காலத்தின் கட்டாயம் என இம் மாநாடு கருதுகின்றது.
6. மலேசியத் தலைமை அமைச்சரது சிறப்பு அதிகாரியின் சமீபத்திய சுடுசொற்கள், தமிழர்களின் குடியுரிமையைப் பறிப்பதாகவும் தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக இழிவுப் படுத்தியதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.
7. மலேசியாவில் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதும், இழிவுப்படுத்தப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
8. மலேசிய மலையகங்களில் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
9. மலேசியாவில் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஜப்பானியர்களால் வலுகட்டாயமாக சயாம் மரண ரயில் பாதைப் பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு கொலையுண்ட லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு ஜப்பான் நாடு நட்டஈடு தரப்பட வேண்டும்.
10. மலேசியாவில் மலாயா பல்கலைக் கழகத்தின் இந்தியப்பிரிவில் தமிழ்ப்பகுதித் தலைவர் நீக்கம் செய்யப்பட்டு, ஒரு மலாய்காரர் பதவி ஏற்றுள்ளார்; கூடவே இந்தியப் பிரிவு தென்கிழக்கு ஆசிய ஆய்வுக்கூடமாக மாற்றம் காணும் என்று அறிக்கையில் கூறியபடி இயல்பாகவே இந்திக்கும், சமஸ்கிருத மொழிக்கும் படிகள் கட்டி பாதைகள் அமைக்க தயாராகியுள்ளதை மலேசியத் தமிழர்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் எஸ்.பி.எம் தேர்வில் தமிழ் இலக்கியத்திற்கும் இடமில்லை என பேரிடியாக அறிவித்துள்ளனர். இதற்கு மலேசிய அரசாங்கத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
11. மலேசியாவில் இயங்கிவந்த 1500 தமிழ்ப்பள்ளிகள், இன்று 524 பள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளன. இத்தகைய தமிழ்க் கல்வி மறுப்பு கைவிடப்பட்டு தேவையான தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கி தமிழாசிரியர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.
12. மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் பெரும்பான்மையாக உள்ள தமிழ் மக்களைக் கணக்கில் கொண்டு இங்குள்ள இந்தியத் தூதரகங்களில் தலைமைப் பொறுப்புகளில் தமிழரையே நியமித்தல் வேண்டும்.
13. தமிழ்நாட்டில் விளை நிலங்களை மொத்தமாக ஆலைகளுக்கு விலைக்கு வாங்கி, தரிசாக்குவதும், தமிழ் நிலங்களை மாற்றாரது வணிகக் குழுமங்களுக்கு சொந்தமாக்குவதுமான அபாயம் நடைபெற்று வருகின்றது. இதைத் தடுத்து நிறுத்த உடனடியாக தமிழக அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.
14. ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டிற்கு நியாயமாகச் சேர வேண்டிய தமிழக மத்திய ஆட்சியாளர்களின் நதிநீரைப் பெற்றுத்தருவதில், பலவீனத்தைப் பயனபடுத்தி அரசு துரோகம் இழைக்கின்றது என இம்மாநாடு குற்றஞ்சாட்டுகின்றது.
15. தமிழ்நாட்டின் சொத்தான கச்சத்தீவைத் திரும்பப் பெற 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு தாரை வார்ப்பு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும்.
16. 1983 முதல் இன்றுவரை 25 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையினர் மீது கொலைக் குற்ற வழக்கைப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17. தமிழக இளைஞர்களைத் திசைதிருப்பி வரும் போதைப்பழக்கம், திரைப்படப்பித்து, லாட்டரி மோகம் ஆகியவற்றை அனுமதிக்கும் ஆபத்தான போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும்.
18. இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியை ஆக்க வேண்டும்.
19. அண்மை காலங்களில் தமிழ்நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைக்கு எதிராக அரங்குக் கூட்டங்களுக்குக்கூட அனுமதி மறுப்பதாகவே காவல்துறையின் போக்கு உள்ளது. ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் சென்றுதான் உரிமைகளைப் பெற வேண்டும் என்ற நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. இந்த அவலநிலை நிறுத்தப்படாவிட்டல் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென இம் மாநாடு எச்சரிக்கிறது.
20. இந்திய நாட்டிலேயே பெங்களூர், மும்பை, தலைநகர் டெல்லி போன்ற நகரங்களில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், உடமைகள் சேதப்படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டு அவர்களின் ‘வாழ்வுரிமையை’ உறுதி செய்ய வேண்டுமென மத்திய,மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
21. இன்று பிப்ரவரி 6,7-2010 இல் நடைபெற்ற உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்குப் பின், 100 நாட்களுக்குள் இலங்கையில் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டு வதைப்பட்டு கொண்டிருக்கும் 3 1/2 இலட்சம் தமிழர்களைத் தங்களது சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்ய வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் செய்யக் கூடாது, சிங்கள இராணுவம் உட்பட பிறநாட்டு இராணுவம் அனைத்தும் தமிழர் பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் தமிழகத்திலிருந்து ஒரு இலட்சம் இளைஞர்கள், இலங்கை நோக்கி புறப்பட உள்ளோம் என்பதை இம்மாநாடு பறைசாற்றுகின்றது
