”அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்” எனும் பிரகடனத்துடன் ”மாநில இளைஞரணி மாநாடாக” நடைபெற்றது.
![]()
திருச்சியில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி ”அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்” என்ற தலைப்பில் ”மாநில இளைஞரணி மாநாடாக” நடைபெற்றது.
தேவேந்திரகுல இளைஞர்களுக்கு பத்துக் கட்டளைகள்!
1. ஒவ்வொரு தேவேந்திரகுல இளைஞனும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்; கல்வி என்பது வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக அல்ல; வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் உன்னதமான வாழ்க்கைத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு என்ற அடிப்படைத் தத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு இளைஞனும் குறைந்தது மூன்று வேலைகளைச் செய்யும் திறனாளிகளாகத் தங்களை இளம் வயதிலேயே தயார்டுத்திக் கொள்ளவும், மூன்று மொழிகளைப் பேசவும், தாய்மொழியாம் தமிழ்மொழியை பிழையின்றிப் பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும் என தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களை புதிய தமிழகம் இளைஞரணி மாநாடு வலியுறுத்துகிறது.
2. தீயப் பழக்கவழக்கங்களான மது, புகை, போதை மருந்துகளை உபயோகித்தல், தற்காலிகமாக மட்டுமல்ல, மரபு அணுக்கள் மூலம், அடுத்த தலைமுறைக்கும் அந்த அடிமைப் பழக்கவழக்கங்களும், பாதிப்புகளும் கடத்திச் செல்லப்படும் என்பதை உணர்ந்து, அவற்றை அறவே விட்டொழிக்கவும், திரைப்பட மாயை, சூதாட்டம் ஆகியவற்றிலிருந்து வெளிவரவும், இவைகுறித்து சமூக மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் தேவேந்திரகுல இளைஞர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
3. அகத்தூய்மையும், புறத்தூய்மையும் சமூக விடுதலையின் மிகப்பெரிய அம்சங்களாகும். எனவே உடல், உள்ளம், வீடு, வீதி, ஊர் என அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளவும், தூய்மையைப் பேண விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளவும் தேவேந்திரகுல இளைஞர்களை புதிய தமிழகம் இளைஞரணி மாநாடு கேட்டுக் கொள்கிறது.
4. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற உயரிய முதுமொழியை உயர்மொழியாகக் கருதித் தங்களது உணவு, உடற்பயிற்சி, மனத்திடப் பயிற்சி ஆகியவற்றில் இளம் பிராயத்திலே கவனம் செலுத்த வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
5. 18 வயதைத் தாண்டிய எந்தவொரு இளைஞனும் பெற்றோருக்கு சுமையாக இருக்கக்கூடாது. சுயமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய வகையில் செயல்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
6. ஆண்மகனாக இருந்தால் 27 வயதிற்குப் பின்பும், பெண்மகளாக இருந்தால் 24 வயதிற்குப் பின்பும், திருமணம் செய்து கொள்ளவும், அதுவரையிலும் தங்களை சுயமாக நிலைநிறுத்திக் கொள்ள ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் புதிய தமிழகம் இளைஞரணி மாநாடு கேட்டுக் கொள்கிறது.
7. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது; இரண்டு குழந்தைகளுக்கு இடையே குறைந்தது, இரண்டு வருட இடைவெளி இருக்க வேண்டும். இக்கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களுமே நமது குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.
8. 18 வயது வரையிலும் குழந்தைகளின் படிப்பு மட்டுமின்றி, உலகம் போற்றும் பண்புகளை வளர்த்திடவும், அக்கறை செலுத்திடவும் வேண்டும்.
9. 18 வயதிலிருந்து 27 வயது வரையிலும் உள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் குறைந்தது ஒரு வருடமாவது தேவேந்திரகுல சமூக வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, புதிய தமிழகம் கட்சியையும், சமரசமில்லா போராளி டாக்டர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களையும் அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல, கிராமங்களில் களப்பணி ஆற்றிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
10. சுய ஒழுக்கம், கட்டுப்பாடுகள், திறன்களில் மற்றவர்களைக் காட்டிலும் மேம்படவும் நல்ல குணங்களால் இம்மண்ணை ஆளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
மாநாட்டுத் தீர்மானங்கள்:
1. தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி, மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி நடைபெறும் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி முதல் மாநில மாநாட்டில், கொட்டும் மழையிலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆர்வத்தோடும், எழுச்சியோடும் கலந்துகொண்டுள்ள தேவேந்திரகுல இளைஞரணி சிங்கங்களுக்கும், இம்மாநாடு வெற்றிகரமிக நடைபெற மிகக் கடுமையாக பாடுபட்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைச் செயலாளர்களுக்கும், பிற நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும், தேவேந்திரகுல சொந்தங்களுக்கும் புதிய தமிழகம் கட்சி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
2. தேவேந்திரகுல மக்களின் மரபுவழி அடையாளத்தை மீட்டெடுக்கவும், அவர்களை பட்டியல் பிரிவிலிருந்து விலக்கி மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்திடவும் தொடர்ந்து போராடி வரும், சமரசமில்லா போராளி டாக்டர் அய்யா அவர்களுக்கு இம்மாநாடு தனது வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. இக்கோரிக்கை வெற்றியடையும் வரையிலும் டாக்டர் அய்யா அவர்களின் பின்னால் இரும்புச் சங்கிலிப் பிணைப்புகள் போல், தேவேந்திரகுல இளைஞர்கள் பட்டாளமும் அறிவுஜீவிகளும் அணிதிரண்டு போராடுவோம் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
3. உழவர்கள் சேற்றிலே கை வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றிலே கை வைக்க முடியும் என்பதற்கு இலக்கணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இன்று வரையிலும் வாழ்ந்து வரும், தொல்காப்பிய காலத்திலேயே மருதநில மக்களாக அடையாளப்படுத்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களை “அரசாணை மூலம் அடையாளப்படுத்தவும், அம்மக்களை தவறுதலாக ஆங்கிலேயர் காலத்தில் பட்டியலிடப்பட்டதை சரிசெய்து, மிக பிற்படுத்தப்படோர் பட்டியலில் சேர்த்திட மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்துவதை புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநாடு கவலையுடனும், வேதனையுடனும் சுட்டிக்காட்டுகிறது.
4. கடந்த மே மாதம் 6-ஆம் தேதி, விருதுநகர் மாநாட்டில் அறிவித்தபடி, 6 மாதகாலம் ஆகியும், தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பித்திடவும், மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திடவும், மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வரும் நவம்பர் 6-ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்துவது என இம்மாநாடு முடிவு செய்கிறது.
5. ஆங்கிலேயர் காலத்தில் இழைக்கப்பட்ட தவறே தேவேந்திரகுல வேளாளர்களின் ஒட்டுமொத்த பின்னடைவிற்கும் காரணம் என்பதை சுட்டிக்காட்டும் வண்ணம், தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்புகளுக்கு பிரிட்டிஷ் அரசிடம் நட்ட ஈடு கேட்டு, ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகை இருப்பதால், நவம்பர் 15-ஆம் தேதி சென்னையில் அமைந்துள்ள பிரிட்டிஷ் ஹை கவுன்சில் (British High Council) அலுவலகத்தை நோக்கி, பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
6. 2019, ஜனவரி 6-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி யின் முன்முயற்சியில் தமிழகமெங்கும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனவும், கோரிக்கை நிறைவேறும் வரையிலும் தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
7. தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பே ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாள மீட்பு என புதிய தமிழகம் முற்றாகக் கருதுகிறது. தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மறுப்பு என்பதை தமிழர்களின் அடையாளத்திற்கும், தமிழர்களின் அதிகாரத்திற்குமான மறுப்பாகவே கருதுகிறோம். ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தமிழ் சமுதாயம் திராவிட இயக்க சித்தாந்தத்தால் பிளவுபட்டு நிற்கிறது. தமிழர்களிடையே ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் உருவாக்குவது என்பது தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பிலிருந்தே துவங்குகிறது. திராவிட சித்தாந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமும், குடும்ப ஆட்சிமுறைகளை ஒழித்துக் கட்டுவதன் மூலமும் தான் மரபுவழி தமிழர் ஆட்சியை நிறுவ இயலும். எதிர்வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நமது பாரம்பரிய அடையாளத்தை மீட்டெடுக்கவும், மரபுவழி உண்மைத் தமிழர்களை ஆட்சி, அதிகாரத்தில் அமர்த்துவதற்குமான களமாக அமையும். ‘அடையாள மீட்பே அரசியல் அதிகார மீட்பு’ என்ற இலட்சியத்தை அடைய திராவிட சித்தாந்தங்களுக்கு மாற்றாக அடையாள அரசியலை முன்வைத்து, அரசியல் களம் காணும் புதிய தமிழகம் கட்சியே தமிழர்களின் எதிர்காலம் ஆகும். தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களின் அரசியல் கவசமாகவும், வருங்கால அரசியல் அதிகார மையமாகவும் விளங்கும் புதிய தமிழகம் கட்சியையும், சமரசமில்லா போராளி டாக்டர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்களையும் அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல, ஒன்றியத்திற்கு 100, மாவட்டத்திற்கு 1000 புதிய தமிழகம் இளைஞர்கள் ஒருங்கிணைந்து இன்றிலிருந்தே கிராமங்கள் தோறும் களப்பணியாற்றுவது என இளைஞரணி மாநாடு தீர்மானிக்கிறது.