மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மனிதநேயமிக்க வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து, 2006 வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA, அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம்.
9 Views

![]()
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக மனிதநேயமிக்க வழக்கறிஞர்களை உடனடியாக நியமித்து, 2006 வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA, அவர்கள் எழுதியுள்ள கடிதத்தின் சாராம்சம்.
……………………………………………………………
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் ஏறக்குறைய ஆறு தலைமுறைகளாக 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், அவர்கள் பணியாற்றி வந்த BBTC (பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்) நிர்வாகம், தன் குத்தகை ஒப்பந்தக் காலம் முடிவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே, 2024-ஆம் ஆண்டு மே மாதம் விருப்ப ஓய்வு மற்றும் கதவடைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து, தங்களின் வாழ்வாதாரத்தைத் இழந்து, கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வாழ்ந்து வரும் அம்மக்கள், 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி அங்கேயே வாழும் உரிமை பெற்றவர்கள் ஆவர். எனவே, அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தலா 2 ½ ஏக்கர் நிலம் வழங்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்த ஆட்சியின் தொழிலாளர் விரோதப் போக்கின் காரணமாக, இத்தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொழிலாளர்களுக்குப் பாதகமான தீர்ப்பு வந்தது.
தற்போது இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் விசாரணையில் உள்ளது. அங்கு வாழும் பல குடும்பங்களுக்கு வேறு எங்கும் சொந்த வீடோ அல்லது வாழ்விடங்களோ கிடையாது. எனவே, அவர்களின் வாழ்வுரிமையை மாஞ்சோலை பகுதியிலேயே மீட்டெடுத்துத் தர வேண்டுகிறேன்.
இது குறித்த வழக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, “ஏற்க்குறைய 100 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வாழ்ந்து வந்த உண்மை வரலாறுகளை மறைத்துவிட்டு, கடந்த அரசு சார்பில் அங்கு மக்கள் வாழ்வதற்கான எவ்விதச் சூழ்நிலையும் இல்லை” என தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 20.05.2026 அன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மாஞ்சோலை வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை. இதனால் “கோபமுற்ற நீதிபதிகள் கடந்த அரசு நியமித்த வழக்கறிஞர்களின் கருத்தையே கேட்போம்” என்று கருத்து தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
எனவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நமது விஜய் அவர்களின் அரசு தாயுள்ளத்தோடு உச்சநீதிமன்றத்தில் மனிதநேயமிக்க வழக்கறிஞர் ஒருவரை நியமித்து; 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தி, மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட வேண்டுமென என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
21.05.2026






