சாம்சங் தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
313 Views
![]()
சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள சாம்சங் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கு மேலாகப் போராடி வருகிறார்கள். இது போன்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது அவர்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால், நிர்வாகத்திற்கு ஆதரவானவர்களுக்கு மட்டும் சங்க அங்கீகாரம் அளித்து ஒப்பந்தம் போடுவதும், பெரும்பாலான தொழிலாளர்களை உள்ளடக்கிய சங்கத்தை அங்கீகரிக்க மறுப்பதும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல!
நேற்று இரவு தங்களது இல்லங்களில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை அடாவடியாக கைது செய்தும், இன்று அவர்களின் விடுதலை கோரி போராடிய சி.ஐ.டி.யு சௌந்தரராஜன் உட்பட எண்ணற்ற தொழிலாளர்களைக் கைது செய்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. தொழிலாளர்களின் போராட்டத்தை காவல்துறையைக் கொண்டு ஒடுக்க நினைக்கும் அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
நியாயம் கேட்டுப் போராடிய அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன். மேலும், நிர்வாகம் அரசு, தொழிலாளர்களின் உண்மையான பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்புப் பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
– டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
09.10.2024






