மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும்!

திருநெல்வேலி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் போதாது, முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை டாக்டர் கிருஷ்ணசாமி வழங்கினார்.
பின்னர் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஒரு நாள் மட்டும் திருநெல்வேலியை பார்வையிட்டு சென்றது போதாது. மீண்டும் அவர் இங்கு வந்து நிவாரண பணிகளை முடுக்கிவிட வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியாது. 6 நாட்கள் கடந்த பின்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு, பால் மற்றும் குடிநீர் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி பொது மக்களுக்கு உடனடியாக உதவி வழங்க வேண்டும். இலவசங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டு, மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிரந்தரமாக செய்து தர முன்வர வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ரூ.6 ஆயிரம் போதாது. முதற்கட்டமாக ரூ.15 ஆயிரம் நிவாரணம் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
– செய்தி தினமணி நாளிதழ்